Saturday, August 15, 2015

மிகவும் சக்தி வாய்ந்தது காயத்ரி மந்திரம்

மிகவும் சக்தி வாய்ந்தது காயத்ரி மந்திரம்

நமது புராதன மந்திரங்களில் மிகவும் நேர்த்தியானதும், மிகவும் சக்தி வாய்ந்ததுமான மந்திரம் காயத்ரி மந்திரம் தான். விவரிக்க முடியாத அளவிற்கு அதற்குள் சக்தி அடங்கியுள்ளது. நம்முள் உறங்கிக் கொண்டிருக்கும் ஆன்மீக சக்தியைத் தட்டி எழுப்பக்கூடிய மந்திரமே காயத்ரி மந்திரம். 

காயத்ரி மந்திரப் பொருள். 'நம்முடைய புத்திகளை நல்லனவற்றைப் பற்றி நிற்குமாறு தூண்டுகின்ற (சூர்ய மண்டலத்தில் உள்ள) ஒளிமயமான பகவானுடைய மங்கள ஸ்வரூபத்தை உபாசிக்கின்றேன். ஜபம் செய்யும் போது மேற்கூறிய பொருளை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். அவரவர்களுடைய சக்தி - நேரம் இவைகளுக்கு ஏற்றவாறு 1008, 108, 28 - முறைகள் காயத்ரி மந்திரத்தை ஜபிக்க வேண்டும். மனதுக்குள்ளேயே மனனம் செய்து ஜபிப்பது ஒரு வகை. 

முணு முணுத்து ஜபிப்பது இரண்டாம் வகை. பிறர் காதில்படும் படி உயர்ந்த குரலில் ஜபிப்பது மூன்றாம் வகை. உயர்ந்த குரலில் ஜபிப்பதை விட முணு முணுத்து ஜபிப்பது நூறுமடங்கு சிறந்தது. முணு முணுப்பை விட மனத்தளவில் ஜபிப்பது ஆயிரம் மடங்கு சிறந்தது. காயத்ரி ஜபம் செய்யும் போது இரண்டு உள்ளங்கை களையும் சிறிது வளைந்து முகத்துக்கு நேராக உயர்ந்து இருக்க வேண்டும். விரல்கள் சேர்ந்திருக்கக் கூடாது. 

ஜபகாலத்தில் காயத்ரியை எண்ணும் போது சுண்டு விரலின் அடிப்பாகத்தில் உள்ள கணுவிலிருந்து பிரதக்சினமாக மோதிரவிரலின் அடிப்பாகத்திலுள்ள கணுவரை எண்ண வேண்டும். இப்படி எண்ணினால் பத்து எண்களாகும். அக்சமாலை முதலியவற்றைக் கொண்டு எண்ணக் கூடாது ஓம், பூர்புவஸ்ஸூவ: தத்ஸவி துர்வ ரேணியம், பர்க்கோ தேவஸ்யதீமஹி, தியோ யோ ந: பிரசோதயாத் என்று ஐந்து பகுதிகளாக நிறுத்தி ஜபிக்க வேண்டும். தூணிலோ சுவரிலோ சாய்ந்திராமல் நேராக உட்கார்ந்து ஜபிக்க வேண்டும். 

இரண்டு கைகளையும் வஸ்திரத்தினால் மூடிக் கொண்டு ஜபிக்க வேண்டும். பூஜை அறையில் இறைவனுக்கு முன் உட்கார்ந்து உச்சரிப்பது மிகச் சிறந்தது. இந்த மந்திரத்தைச் சொல்வதால், உயிர் வலிமை பெறும், உடலில் சக்தி அதிகமாகும். பகைவர்களை வெல்லும் திறமை ஏற்படும். எல்லாவற்றுக்கும் மேலாக அறிவு சுடர்விட்டுப் பிரகாசிக்கும். உள்ளம் தூய்மை அடையும் உள்ளுள் இருக்கும் ஆன்ம ஒளி, காயத்ரியை ஜபிப்பவன் முகத்தில் ஞானஒளியாக மலரும். 

நீண்ட ஆயுளும், காலத்தைக் கையாளும் திறனும் ஏற்படும். காயத்ரி மந்திரம் உலகத்துக்கே பொதுவானது. இது பரம்பொருளை தியானிக்கச் சொல்கிறது. எந்தக் கடவுளையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. எனவே நாடு, மொழி, இனம், மதம், ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லாரும் இதனை ஜபிக்கலாம். காயத்ரி மந்திரங்கள் கொண்ட சிறு, சிறு புத்தகங்கள் உள்ளது. அவற்றை வாங்கி பூஜை அறையில் வைத்து படிக்கலாம்.

No comments:

Post a Comment