Saturday, August 15, 2015

கடவுளின் உதவி

கடவுளின் உதவி

கடவுளின் மீது நம்பிக்கை கொண்ட விவசாயி ஒருவன் இருந்தான். அவனது இறை நம்பிக்கை எப்படிப்பட்டது என்றால், எந்த துன்பம் வந்தாலும் இறைவன் காப்பாற்றுவார் என்பதுதான். தன் துன்பத்திற்கான காரணம் என்ன? அதை நம்மால் சரி செய்ய முடியுமா என்பது பற்றியெல்லாம், அந்த விவசாயி ஒருபோதும் சிந்தித்துப் பார்த்தது இல்லை. 

எப்போதும் இறைவன் மீதே தன் பாரத்தை இறக்கி வைப்பவனாக இருந்தான். ஒரு நாள் தனது தோட்டத்தில் விளைந்த பொருட்களை எல்லாம், மூட்டைகளாக கட்டி மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு, பக்கத்து ஊரில் நடந்து கொண்டிருந்த சந்தைக்கு சென்று கொண்டிருந்தான் அந்த விவசாயி. வனப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்தான். முன்தினம் பெய்த பலத்த மழையின் காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கி, சேறும் சகதியுமாக கிடந்தன. 

தண்ணீர் தேங்கிக் கிடந்த பெரும் பள்ளத்தில், விவசாயி ஓட்டி வந்த மாட்டு வண்டியின் சக்கரங்கள் சிக்கி புதைந்து கொண்டன. மாட்டினால் வண்டியை அந்த பள்ளத்தில் இருந்து இழுக்க முடியவில்லை. உடனே விவசாயி, ‘கடவுளே! இது என்ன சோதனை? எனக்கு உதவி செய்!’ என்று மனமுருக வேண்டினான். கடவுள் வரவில்லை. இரண்டாம் முறை, மூன்றாவது முறை என தொடர்ச்சியாக பலமுறை இறைவனை வேண்டியும், அவர் வருவதாக தெரியவில்லை. வனப்பகுதி என்பதால் உதவிக்கும் யாரும் இல்லாமல் விவசாயி தவித்துப் போனான். 

இறுதியாக வண்டியில் இருந்து இறங்கியவன், பள்ளத்தில் புதைந்திருந்த சக்கரத்தை தானே தூக்கி நகர்த்த முயற்சி செய்தான். என்ன ஆச்சரியம்! தன்னால் தனியாக சாதிக்க முடியாது என்று அவன் நினைத்திருக்க, சக்கரம் பள்ளத்தில் இருந்து எளிதாக வெளியே வந்தது. எதேச்சையாக வண்டியின் பின் பக்கம் திரும்பி பார்த்தான் விவசாயி. அப்போது தான் அவனுக்கு, தன் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு வழிப்போக்கன், சக்கரத்தை தூக்குவதில் உதவி செய்தது தெரியவந்தது. 

அந்த வழிப்போக்கனை வணங்கியவன், ‘மிகவும் நன்றி ஐயா! கடவுள் செய்யாத உதவியை நீங்கள் செய்து விட்டீர்கள்’ என்றான். ‘கடவுளே! உதவி செய்!’ என்று சொல்லியபடி கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தால், கடவுள் எப்படி உதவி செய்வார். நீயே முயற்சி செய்தால்தான், கடவுள் உனக்கு உதவி புரிவார். அதற்கு நீதான் அவருக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும்’ என்று கூறிவிட்டு, வழிப்போக்கன் தன் வழியே நடக்கத் தொடங்கினான்.

No comments:

Post a Comment